Wednesday, 17 July 2019

பயணம்

அன்னையின் மடியினின்று..
ஆரம்பித்த பயணமிது!!
முன்னேறும் வழிமுழுதும்..
முரண்நிறை பயணமிது!!

சகப்பயணி இறங்கினாலும்..
சளைக்காத பயணமிது!!
விகற்பங்கள் விளைந்திருந்து..
விளங்காத பயணமிது!!

இறங்கிடும் இடம்வந்தும்..
இசைவடையா பயணமிது!!
மறந்திட மனமின்றி..
மிசையேறும் பயணமிது!!

ஏளனங்கள் இறக்கிவிட்டு..
சாளரக் காற்று வாங்கி..
சளைக்காது பயணிப்போம்!!
நற்காலை வணக்கம்!!!
(விகற்பம் - மனக்கோனல் / மிசை - மேல்)

ஆசிரியர்

கல்வியெனும் கலைச்செல்வம்-அதை
கற்பிப்போரும் நம் தெய்வம்
எல்லையில்லா உயர்நிலைக்கு-நமை
ஏற்றிவிடும் ஏணிகளாம்

தாயின் மொழியெனினும்-அதை
தவறின்றி நாம் கற்க..
தூய மனம்கொண்டு-உடன்
துவளாமல் துணை நிற்பர்!!

அறிவுச் சுடர்கொண்டு-பல
ஆயிரம் விளக்கேற்றிடுவர்!!
சிறகடைந்து சிகரம் தொட்டும்-நாம்
செய்நன்றி காட்டி நிற்போம்!!

மாசிலாத மனம் கொண்ட..
ஆசிரியர் அடி பணிவோம்!!
இனிய காலை வணக்கம்!!!

வீடு

வாசலிலே வண்ணக்கோலம்..
வகையாய் வரவேற்க..
ஊசலாடும் தோரணங்கள்..
உகந்தாடி உபசரிக்க..

மூலிகைப் புகைக்காற்று..
முழுசுவாசம் புகுந்துவர..
பாலும் பொங்கிக்கொட்ட..
பழமைகள் பறந்தோட..

ஆனவம் அகன்றோட..
அத்வைத ஒலிபரவ..
புனிதமாய் நிகழ்ந்ததங்கு..
புதுமனைப் புகுவிழா!!

இல்லமென்னும் இருப்பிடம்..
இன்னிசையாய் இனித்திடும்!!
காலை வணக்கம்!!!

Tuesday, 16 July 2019

கோலம்

புள்ளிகளால் பூத்த பூக்கள்!!
புன்னகைத்து நின்றனவே!!
வெள்ளை இழைக்கோட்டினாலே..
வெளிவந்த வேய்ங்குழல்கள்!!
மயில்கள் ஆடும் மகத்துவமும்..
மான்கள் ஓடும் மாண்புகளும்..
கயல்கள் துள்ளும் காட்சிக்கும்..
கன்னிப் பெண்கள் கைவண்ணம்!!
பக்குவமாய்ப் பார்த்திழைக்கும்..
பாந்தம் நிறை பவித்திரங்கள்!!
சிக்கலிழைச் சித்திரங்கள்!!
சிந்தை கவர் முத்திரைகள்!!
வாசல் வண்ண ஜாலங்கள்!!
வகை செரிந்த கோலங்கள்!!
காலை வணக்கம்!!!

கடிகாரம்

கண்ணாடிப் பேழைக்குள்..
கட்டுண்ட மணித்துளிகள்!!
எண்களான நேரங்கள்..
எட்டாத உயரத்தில்!!

ஒருகால் சிறுத்திருந்தும்..
ஓட்டமோ நிற்பதில்லை!!
பிரிவுகள் நேர்ந்தாலும்..
பிடிமானம் அகல்வதில்லை!!

அடிக்கடி உனைப்பார்த்தும்..
அவசியம் தீருவதில்லை!!
துடிக்கின்ற இதயம்போலே..
துவண்டு நீ துயில்வதில்லை!!

காலம் காட்டும் கருவியே!!
ஞாலம் ஆளும் ஞானியே!!
அன்பு காலை வணக்கம்!!

புடவை

வண்ணவண்ண நூல் கோர்த்து..
வடித்து வைத்த வகைக் கண்டு..
எண்ணமோ ஏங்கி நிற்கும்!!
எடுத்துடுத்த ஆசை வரும்!!

சேர்த்து வைத்த கொசுவங்களோ..
செழித்தாடி அழகு தரும்!!
போர்த்தி நின்ற முந்தானை!!
பொழியும் நீர் ஒத்திருக்கும்!!

பட்டாகி பளபளக்கும்!!
பருத்தியது பதமளிக்கும்!!
எட்டு கஜம் எழிலாகி...
ஏறெடுத்துப் பார்க்கத் தூண்டும்!!

அம்மா வாசனை அதிலுமுண்டு_அவள்
அழுக்கோடு அணைத்தாலும் ஆனந்தமுண்டு!! காலை வணக்கம்!!

பெண்மை

குழந்தையென பிறக்கும்போதே..
கொடுத்து வைத்த குலமன்றோ..
அழகுக்கும் அன்பினுக்கும்..
அடுத்த பொருள் அவளன்றோ..
அன்னையாய் அரவனைத்து..
அக்காளாய் அன்பு தந்து..
சின்னத்தங்கை எனப்பிறந்தும்..
சிக்கல்களில் துணை நின்று..
மகளாகி மகிழ்வு தந்து..
மனைவியாகி மாண்பளித்து..
அகமகிழச் செய்யும் நம்..
அறிவையரைப் போற்றிடுவோம்!!
பெண்மை போற்றுவோம்!!
பெருமிதம் கொள்வோம்!!
இனிய மகளிர் தின வாழ்த்துகள்!!